தர்மம் என்றால் என்ன? — What is Dharma?

தர்மம் என்றால் என்ன?

தர்மம் என்றால் என்ன?

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும்.

தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.

தர்மம் தான் உலகை நிலைநிறுத்துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை.

தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று சொல்லலாம்.

‘ர்தம்’ கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கும் நடத்தைகள் தர்மம் எனப்படும். அத்தகைய செயற்பாங்குகளே, இந்த பிரபஞ்சமும் அதன் உறுப்பினர்களும் முறையாகச் செயல்பட உறுதுணையாகின்றது.

‘ர்தம்’ என்றால் இயற்கை செயல்முறை விதியாகும். அதுவே இந்த பிரபஞ்சத்தையும் அதற்குள் இருக்கும் அனைத்தையும் முறையே செயல்பட இயக்குகின்றது.

தர்மத்திற்கு எதிர்ச்சொல் அதர்மம். பிரபஞ்ச நியதிக்கு எதிராக இருக்கும் செயல்கள் அதர்மம் என்று சொல்லப்படும்.

இந்த பிரபஞ்சத்தினுள் இருக்கும் அனைத்திற்கும் தர்மங்கள் உண்டு. உயிருள்ள உயிரற்ற எல்லாப் பொருள்களுக்கும் தர்மங்கள் உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தர்மங்களையே முறையே செய்து வருகின்றனர். மனிதர்கள் மட்டும் அதில் சற்று வேறுபட்டு, தங்கள் தர்மங்களை மறந்து அதர்மங்களைச் செய்கின்றனர்.

இது உலகின் மாயைகளின் காரணத்தால் அவர்கள் செய்வதே. இதுவே அவர்களின் அறியாமை என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு தர்மங்களை மறந்து செயல்படுவதே பிரபஞ்சம் முறையே செயல்படாது அங்கும் இங்கும் அழிவுகள் நேர காரணமாக அமைகின்றது.

மனிதர்களே தங்கள் அழிவுக்கு வித்திட்டு, பின்னர் இறைவன் கோபப்பட்டு அழிக்கிறார் என்று அவர்மீது பழியைப் போடுகிறார்கள்.

மனிதர்கள் ‘ர்தம்’ கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டு தங்களின் தர்மங்களை செய்தால், இந்த பிரபஞ்சத்தில் எதும் குறைகள் வருமோ?

அவ்வகையில் நாம் மனிதர்களின் தர்மங்களைக் காணலாம்:

1) தனக்கு தானே ஆற்றவேண்டிய தர்மம்

எப்போதும் தன்னை தானே நேசித்துக் கொள்ளவேண்டும். முறையான உணவுப் பழக்கம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிதைக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

நன்கு கல்வி கற்கவேண்டும். மெய்ப் பொருளை உணர்தல் வேண்டும். தெளிவான ஞானத்தோடு இருத்தல் வேண்டும்.

2) இறைவனுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

இறைவன் மீது பக்தியும் பாசமும் கொண்டிருக்க வேண்டும். மலர், நீர், இலை, பழம் வைத்து வழிபடுதல் சிறப்பு.

இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதால், அனைத்தையும் நேசிப்பது முக்கியம்.

3) பித்ருக்களுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

மறைந்த முன்னோர்களின் நினைவுகளை மதிக்க வேண்டும். அவர்கள் நினைவு நாட்களில் ஆகம முறைபடி மரியாதை செய்ய வேண்டும்.

அவர்களின் மோக்ஷத்திற்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.

4) பிள்ளைகளுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

பிள்ளைகளை பாசம், நேசத்தோடு வளர்த்தல். கல்வி, ஒழுக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும்.

அவர்களின் வாழ்க்கை இவ்வுலகிற்கு நன்மை பயக்குமாறு செய்ய வேண்டும்.

5) சக மனிதர்களுக்குச் செய்யவேண்டிய தர்மம்

உணவு, துணி, புத்தகங்கள் போன்றவற்றை தானமாக அளிப்பது உயர்ந்த தர்மம்.

ஞானம் பகிர்வதும் தானமாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றபடி நடக்க வேண்டும்.

யாரையும் உயர்வு-தாழ்வு பாராது நேசிக்க வேண்டும். வணக்கம்/நமஸ்காரம் சொல்லும்போது, "உங்களுக்குள்ளும் உறையும் இறைவனை வணங்குகிறேன்" என்ற உணர்வோடு இருக்க வேண்டும்.