மறப்போம் மன்னிப்போம்
உங்களுக்குப் பிறர் தீங்கு செய்யும் போது, அந்தத் தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு.

போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள்.

நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அது மட்டும் அல்லாமல்.. உங்களால் நிம்மதி ஆகவும் இருக்க முடியும்.

தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும்..

ஒரு நாள் வகுப்பு அறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது ”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்றீர்களா, நீங்கள்?”
மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர்.

வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் ‘ஆமாம்… அய்யா’ என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு,

ஒவ்வொருவராக அழைத்து, ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனைக் கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கிக் கொண்டே சென்றார்கள்.

மாணவர்களுக்குப் பழி வாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையைக் கொடுத்தார் ,

வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டு வரப்பட்டது. யார் மீது எத்தனைப் பழி வாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனைத் தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தக்காளி பை எப்போதும் உங்கள் கூடவே இருக்க வேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்து இருக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை அசைத்தார்கள் மாணவர்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்த, அடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெல்லப் புன்னகைத்த ஆசிரியர், ”நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல, அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டு இருக்கின்றன.

ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளிப் பையை தூக்கி எறியுங்கள்” என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளிப் பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டு வகுப்பு அறைக்குத் திரும்பினர்.

ஆம்.,நண்பர்களே..,

"மறப்போம் மன்னிப்போம்" என்பதைத் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம். அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

அப்படிக் கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்துக் கொள்வார். அப்படி மன்னிக்கா விட்டாலும், கவலையை விடுங்கள்.

உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.